விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமலும் தேவையின்றி வாகனங்களில் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் தற்போது தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது. அங்கு காய்கறி விற்பனை செய்து வரும் 46 கடை உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதை செய்யப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் பலர் காய்கறி வாங்க வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாம் வைத்து முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.